ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லை பகுதி வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான பூனிமாங்காடு ஆரம்ப சுகாதர நிலையம் செல்லும் வழியில் அதிகாலையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து பூனிமாங்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணுடன் வந்தவரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திரா மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த சீனிவாசனை (வயது38) கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.