மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை கண்டித்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்ற திமுக கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், கூட்டம் நடைபெறும் போதே கூட்டத்தில் இருந்து வெளியே சென்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் புதனன்று நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தீர்மானம் கொண்டு வர திமுகவை சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகர் பேசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, சிவா உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் கூட்டத்தில் பேசினார்கள். ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலாது என கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உறுதியாக கூறினார்.

அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தே போது கூட்டத்தில் இருந்து வெளியேறி மத்திய மாநில அரசுகளை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாலதி குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி , திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, சிட்டிபாபு, ஜெயச்சந்திரன், அமலா சரவணன், சிவா, ஜெயந்தி, பாசம் அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மதன்மோகன் உள்ளிட்ட 14 பேர் கவுன்சிலர்கள் 2 மாவட்ட கவுன்சிலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து 30 நிமிடம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777