திருவள்ளுர் அருகே, மரக்கன்றுகளை நட்டு வைத்து, விவேகானந்தரின் கருத்துகளை, மக்களிடம் நடிகர் விவேக் எடுத்து கூறினார்…
1 min read
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்தின் கோசாலை மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் மையம் சார்பில், உழவர் திருநாள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திரைப்பட நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வைத்து உரையாற்றும் போது, சுவாமி விவேகானந்தர் குறித்து கிராம மக்களிடையே எடுத்துக்கூறினார், அவரது பொன்மொழிகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து பொங்கல் திருநாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு வைத்தேன்.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அறிவுறுத்தலின் பேரில், இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் மேலும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் வைத்துள்ளேன் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தேவி மற்றும் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – லெனின் லோகேஷ்
நிழல்.இன் – 8939476777