ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை : போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆடுமேத்துக்கொண்டு இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய போக்ஸோ நீதிமன்றம். சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா குண்ணவாக்கம் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ் (வயது 34). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் இரண்டு சிறுமிகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
இதனை அறிந்து காட்டுப் பகுதிக்குச் சென்ற சுரேஷ், சுமார் 11 வயதுடைய சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த நிலையில் ஒலிபெருக்கியின் சத்தம் காரணத்தினால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
அங்கிருந்த மற்றொரு சிறுமி சுரேஷுடன் சென்ற சிறுமியை தேடி சென்று உள்ளார். அப்போது சுரேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து ஓடி ஊருக்குள் சென்று அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் வருவதை கண்டதும் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுரேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
மூர்த்தி - தலைமை செய்தியாளர், திருவண்ணாமலை