ஆதரவற்று காயங்களுடன் பேருந்து நிலையத்தில் படுத்துக்கிடந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த சமூக ஆர்வலர் : போலீசார் பாராட்டு!
ராஜபாளையம் சொக்கர் கோவில் அருகே ஆதரவற்ற நிலையில் காயங்கள் இருந்த முதியவரை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலரை பாராட்டிய காவல்துறை ஆய்வாளர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது முதியவர் ஒருவர் மழையில் நனைந்து உடல் நல குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். இதுகுறித்து கரங்கள் சேவை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டேனியல்.பிரேம் ஆனந்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் உடனே ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தெற்கு காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மேட்டூரில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியவரை அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.
மேலும் இதுபோன்று முதியோர்கள் ஆதரவற்றவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் காப்பகத்தில் சேர்த்துள்ளதாக டேனியல் பிரேம் ஆனந்த் கூறினார்.இதுபோன்ற ஆதரவற்றவர்களை அழைத்துச் சென்று தனியார் காப்பகத்தில் விடுவதற்கு பதிலாக அரசு ராஜபாளையத்தில் இடம் ஒதுக்கி கொடுத்தால் ஆதரவற்றை முதியோர்களை கடைசிவரை பார்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777