மதுரை அலங்காநல்லூர் அருகே கொடூரமான முறையில் புது மாப்பிள்ளை கொலை - போலீஸ் விசாரணை

திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன புது மாப்பிள்ளை தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் அருகே கொடூரமான முறையில் புது மாப்பிள்ளை கொலை - போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (25). தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி  ஒரு வருடம் ஆகிறது. 

இந்த நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு கழுத்து அறுபட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் பொன்மணி சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் பொன்மணி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமயநல்லூர் சரக டிஎஸ்பி பாலசுந்தரம் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். 

மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

 திருமணமாகி ஒரு வருடத்திலேயே புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் - 8939476777