மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் தங்களது விருப்பமான துறையில் விடாமுயற்சி இருந்தால் இலக்கை அடையலாம்! : பிரேசில் சர்வதேச இயற்பியல் நிறுவன முதுமுனைவர் சதீஷ்குமார் சரவணன் சிறப்புரை.
பிரேசில் சர்வதேச இயற்பியல் நிறுவன முதுமுனைவர் சதீஷ்குமார் சரவணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் ‘கருந்துளை’ அறிவியல் அதிசயம் குறித்து பேசினார்.

கோவை நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பிரேசில் சர்வதேச இயற்பியல் நிறுவன முதுமுனைவர் சதீஷ்குமார் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‘கருந்துளை’ எனும் தலைப்பில் கலந்துரையாடினார்.
மாணவர்களுடன் பேசிய அவர் கருந்துளைகள் உருவாவது குறித்தும் அதனுடைய அடிப்படை பண்புகளான தற்சுழற்சி மற்றும் நிறை குறித்த சிக்கலான தீர்வுகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிதாக விளக்கினார்.
மேலும், கருந்துளைகள் பற்றிய அவரது ஆராய்ச்சியின் கருத்துகளையும் அதன் முடிவுகளையும் பகிர்ந்து கொண்டார். வானியல் ஆராய்ச்சி குறித்தும் அதனை மேற்கொள்வதற்கு இளங்கலை படிப்பை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும், அதில் உள்ள சவால்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
முதுகலை நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் தங்களது விருப்பமான துறையில் விடாமுயற்சியோடு இருந்தால் இலக்கை கண்டிப்பாக அடைய முடியும் என்று ஊக்கமளித்தார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்பித்தார். கிராவிட்டி என்ற செய்தி மடலின் ஆறாவது பதிப்பை வெளியிட்டார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் முனைவர் பி.எல்.சிவகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் முனைவர் எஸ்.பூங்குழலி, துணை பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777