அரசு பேருந்தில் 9 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர்கள் கைது.
ஆம்பூரில் அரசு ஏ.சி. பேருந்தில் டிக்கெட் பரிசோதனை செய்தபோது இளைஞர்கள் இருவர் 9 கிலோ கஞ்சா இருப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தில் முதல் நிலை டிக்கெட் பரிசோதகர் உமாபதி மற்றும் பிச்சை ஆகியோர் தலைமையிலான குழுவினர், அரசு பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு குளிர்சாதன பேருந்தில், டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போதி 2 இளைஞர்கள் வைத்திருந்த பைகளை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா இருப்பதை உறுதி செய்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள், உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் கஞ்சா கடத்திய 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சரத் மாலிக் மற்றும் ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் தீவிர விசாரணை செய்ததில், ஓசூர் பகுதியில் விநியோகிஸ்தர் ஒருவர் உள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் ஓசூருக்கு சென்று அங்கு இருந்த பல்ராம் மாலிக் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் 3 பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா வழக்கில் 3 வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.