பொன்னேரியில் 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : பயனடைந்தவர்கள் மக்கள் மகிழ்ச்சி
பொன்னேரியில் 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் வழங்கினர்.
பொன்னேரி, ஜூலை-1
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாயத்தின் பேரில் நடைபெற்ற ஜமாபந்தியில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதில், முதியோர் உதவித்தொகைக்காக 114 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவிக்காக 24 பேருக்கும், விதவைத் தொகைக்காக 60 பேருக்கும், உட்பிரிவு பட்டா 31 பேருக்கும், முழு புலம் பட்டா 74 பேருக்கும், குடும்ப அட்டை 76 பேருக்கு என மொத்தம் 379 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். அவருடன் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சித்ரா உள்ளிட்டோர் இதனை வழங்கினர். இறுதியில் தேசிய கீதத்தை மிகவும் இசைநயத்தோடு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பாடி அனைவரையும் உற்சாக மூட்டினார்.