பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் இன மக்கள் - ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் : திமுக அரசின் முயற்சி நிறைவேற இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம்!
‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக திமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் முகநூல் பதிவில், “‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காகக் கழகமும் கழக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்திடவும் தலைமைச் செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், 5,875 குடியிருப்புப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டு, புதிய கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வாக்காளர் அடையாளை அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பல்வேறு உதவித் தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் கழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சமத்துவப் பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் நமது அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணைநிற்கும் என்று அவர்களிடத்தில் உறுதியளித்தேன்!” என பெருமிதத்துடன் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிழல்.இன் - 8939476777